சாவித்திரி கண்ணன்
பத்மா சுப்பிரமணியம் அவர்களைக் கடந்த 30 ஆண்டுகளாக அறிவேன். நான் போட்டோ ஜர்னலிஸ்ட்டாக பரபரப்பாக இயங்கிய காலகட்டத்தில் ஒரு முறை மாமல்லபுரத்தில் அவர் நடத்திய நாட்டிய முகாமிற்கும், ஒரு முறை நாரத கான சபாவில் நடந்த அவரது மாணவிகளின் நடன நிகழ்ச்சிக்கும் சென்று புகைப்படங்கள் எடுத்துள்ளேன். அவரை ஏராளமான ‘குளோஸ் அப் ஷாட்’கள் எடுத்துள்ளேன். அவரது அன்பும், உபசரிப்பும் மறக்க முடியாதவை!
ஆனால், அவர் தற்போது செய்துகொண்டிருக்கும் செயல்பாடுகள் மிகவும் ஆபத்தானவை! அதிர்ச்சிக்குரியவை! பரதக்கலை மீது ஒரு மேல்தட்டு வர்க்கத்திற்கான அடையாளத்தை நிலை நிறுத்தும் அவரது பகீரத முயற்சிகள் தவறானவை!
ருக்குமணி அருண்டேல் போன்றவர்கள் இதனை நமது கணபதி முதலியார் உள்ளிட்ட தமிழ்நாட்டு நட்டுவனார்களிடம் கற்றுக்கொண்ட பிறகு இதற்கு இந்திய அளவிலான ஒரு ஒப்புதல் கருதி, ‘பரதநாட்டியம்’ என்ற சொற்பிரயோகத்தைக் கொண்டு வந்தனர். அதற்கு முன்பு நம்முடைய எந்த இலக்கியத்திலும், கல்வெட்டிலும் ‘பரதநாட்டியம்’ என்ற சொல்லே இல்லை!
சதிராட்டம் எனும் நமது தமிழ் நாட்டிய மரபைப் பற்றிய முழு விவரத்தையும் சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் எழுதியுள்ளார். ஆடல், பாடல் என்று வாழ்ந்த தமிழ் மரபில் மக்கள் மொழியில் இது சதிராட்டம் என்றும், கூத்து என்றும் பேர் பெற்றது.
ஆடல் கலைக்கு சிவனையே மூலவனாகக் கருதும் தன்மை தொன்றுதொட்டு இருந்துள்ளது. வேறெந்தத் தனி நபரையோ அல்லது குறிப்பிட்ட சமூகத்தையோ அடையாளப்படுத்திப் பார்க்கும் எந்த ஒரு ஆதாரமும் இல்லை. நடராஜனின் சிதம்பரம் கோயிலில் கூட இப்படியான ஆதாரங்கள் எதுவுமில்லை. ஆனால் சதிராட்டத்திற்கு ஆதாரமாக சங்க காலம் தொடங்கி 20 ஆம் நூற்றாண்டு வரை ஏராளமான ஆதாரங்கள் உள்ளன.
ராஜ ராஜ சோழனின் சகோதரி குந்தவை நாச்சியார் தொடங்கி இன்னும் நம்மிடைே வாழ்ந்து கொண்டிருக்கும் தேவதாசி மரபின், கடைசி எச்சமான 80 வயதைக் கடந்த பாட்டி விராலி மலையின் முத்துக்கண்ணம்மாள் வரை சதிராட்டத்திற்கான சரித்திரச் சான்றுகள் உள்ளன!
பரத முனி என்ற கற்பனை சிருஷ்டியைப் புதிதாக உருவாக்கி அவருக்கு ஒரு நினைவு மண்டபம், கண்காட்சி அரங்கம், அதற்கு ஒரு திறப்புவிழா ஏப்ரல் 27 நடந்தது. பரத முனி தான் நாட்டிய சாஸ்திரத்திற்கு இலக்கணம் வகுத்தவராம்! என்னே ஒரு பித்தலாட்டம்! பிரபல சிற்பிகள் மெய்மன், கீர்த்திவர்மன்….. உள்ளிட்டோர் இதற்குக் கடுமையான மறுப்பைத் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சிலையை வடிவமைத்தவர் பல தில்லுமுல்லுகள் செய்து இன்று சிறைப்பட்டுள்ள முத்தையா சிற்பி! இந்த பரதமுனி நினைவு மண்டபத்தைக் குத்துவிளக்கேற்றித் திறந்து வைத்தவர் சமீபத்தில் பத்மவிபூஷண் விருதுபெற்ற நாகசாமி. இவர் வரலாற்றைத் திரித்து மதரீதியாகவும், இன ரீதியாகவும் உள்ளர்த்தங்களைத் திணித்து எழுதியவர் என்ற கடுமையான குற்றச்சாட்டுக்கு ஆளானவர். அழைப்பிதழில் ’காஞ்சி மகா ஸ்வாமிகளின் அருளாசியுடன்’ என்ற வாசகம் கண்டேன். நூறாண்டு வரலாற்றுப் பின்னணி கூட இல்லாத காஞ்சிபுர சங்கர மடத்திற்கு 1500 ஆண்டு காலப் போலி வரலாற்றைத் துணிந்து சித்திரித்தவர்களல்லவா? வேறெப்படி இருக்கும்?
சாவித்திரி கண்ணன் பத்திரிகையாளர்.
முகப்புப் படம்: விக்கிபீடியா